எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது! ஆனால் என்ன செய்வது அதிகாரம் கையில் இல்லையே அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

0
85

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது இதுவரையில் கட்சியின் சின்னங்களை பார்த்து மட்டுமே வாக்களித்து வந்த தமிழக மக்கள் தற்போது பணத்திற்காக வாக்களிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நல்ல தலைவர்களையோ திட்டங்களையோ பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை. கடந்த 55 வருடங்களாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் நீர் மேலாண்மை தொடர்பாக சிறிதும் சிந்திக்கவில்லை. காவிரி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளில் இருந்து ஏராளமான உபரி நீர் கடலில் கலக்கிறது. ஆறுகளின் குறுக்கே தடுப்பணை அமைக்க இரு கட்சிகளும் முயற்சி செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்.

இளம் தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும், அடிமையாகி வருகிறார்கள். இலக்கு நிர்ணயம் செய்து தமிழக அரசு மது விற்பனை செய்கிறது. பண்டிகை என்பதால் தீபாவளி அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை விடலாமே? என்ற கேள்வி எழுப்பி உள்ளார் அன்புமணி ராமதாஸ்.

எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் பாமகவிடம் இருக்கிறது. ஆனால் அதிகாரம் கையில் இல்லை என்ன செய்வது? இணையதள சூதாட்டத்தால் பல லட்சம் குடும்பங்கள் நாசமாகி போகின்றன. இதற்கு ஊக்கமளிக்கும் விளம்பரத்தில் நடிப்பதை சரத்குமார் தவிர்த்திருக்க வேண்டும். ஜெயலலிதா இறப்பு தொடர்பான அறிக்கையை இன்னும் முழுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையில் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று பல நலத்திட்டங்களை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.ஆனால் தமிழக மக்களோ அந்த கட்சியை ஒரு முறை கூட இதுவரையில் ஆடசி கட்டிலில் அமர வைத்து பார்க்கவில்லை.

நல்ல அறிவார்ந்த சிந்தனை மற்றும் ஆற்றல்மிக்க தலைவர்களை கொண்ட அந்த கட்சியை ஒருமுறையாவது ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தால் நிச்சயமாக தமிழகம் ஒரு மாபெரும் திருப்புமுனையை சந்திக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

ஆனால் தமிழக மக்கள் எப்போதும் போல அதிமுக, திமுக என்ற இந்த இரு கட்சிகளுக்குள்ளேயே மூழ்கி கிடப்பதால் தமிழகம் முன்னேற்ற பாதையை நோக்கி அடி எடுத்து வைப்பதற்கான சூழ்நிலையே ஏற்படாமல் இருக்கிறது.

வரட்சி என்று வந்து விட்டால் தமிழக விவசாயிகள் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தும் சூழ்நிலை தற்போது நிலவுகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியிடம் இருக்கும் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக தமிழக விவசாயிகள் அண்டை மாநிலங்களில் நீருக்காக கையேந்தும் நிலை நிச்சயம் இருக்காது. ஆனால் அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும்.

அப்படி ஒரு முறையாவது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் நிச்சயமாக தமிழகத்திற்கு ஒரு விடிவு காலம் பிறந்து விடும். திராவிட மாடல் விடியல் ஆட்சி என்றெல்லாம் தெரிவித்துக் கொண்டு பலர் தமிழகத்தை மறைமுகமாக இருளை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் விழித்துக் கொள்ளாத வரையில் தமிழகத்தை வெளிச்சத்தை நோக்கி எவராலும் அழைத்துச் செல்ல முடியாது.