தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மின்தடை? விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி!

0
79

தமிழகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக ஆங்காங்கே தொடர் மின்வெட்டு காணப்படுகிறது. இது தொடர்பாக விசாரித்தபோது தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற மின் தடைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னுடைய பணியை மேற்கொள்ள வந்த லைன் மேன் குப்பன் என்பவரை மின்சாரம் சரியாக வரவில்லை என்று தெரிவித்து ஒரு மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய அவரது மண்டையை உடைத்து விட்டு சென்றது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி நினைவிற்கு வருகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் விருத்தாச்சலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, உட்பட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்தடை உண்டானது. இதேபோல பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் மின்தடை ஏற்பட்டது. தமிழகத்தில் தற்சமயம் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்ற சமயத்தில் இந்த மின்தடை பொதுமக்களை பரிதவிக்க வைத்திருக்கிறது.

இந்த கோடை வெயில் காரணமாக, மின்விசிறி இல்லாவிட்டால் பொதுமக்கள் நிம்மதியாக ஒரு நிமிடம் கூட உறங்க முடியாது. ஆகவே மின்விசிறி போன்ற மின்னணு சாதனங்களை இயக்க முடியாததால் புழுக்கம் காரணமாக, பொதுமக்கள் தூக்கமின்றி துயரமடைந்து வந்தார்கள். மின்சாரம் எப்போது வரும் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களுக்கு இடைவிடாமல் புகார்கள் வந்ததால் அலுவலக தொலைபேசி அழைப்பு சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. பதிலளிக்க முடியாமல் மின்சார ஊழியர்களும் திணறித்தான் போனார்கள்.

மின்சாரம் வரும், வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தும் வராததால் பொறுமையிழந்த பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் நடைபெற்றிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உள்ளிட்டோர் வலைதளப் பக்கத்தில் மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் புகார்களை பதிவு செய்து வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மின் தடைக்கான காரணம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதாவது மத்திய தொகுப்பிலிருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென்று தடைப்பட்டது. இதனால் சில பகுதிகளில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க நம்முடைய வாரியத்தின் உற்பத்தி திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே நகர்புறங்களில் உடனடியாக நிலைமையைச் சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் அமைச்சரின் இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாகயில்லை நகரங்களில் மட்டுமே அவர் தெரிவித்த விளக்கம் சாத்தியமாயிற்று. ஆனால் ஊரக கிராமப்புறங்களில் இன்னமும் மின்வெட்டு குறைந்தபாடில்லை. ஆகவே பொதுமக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

மின்தடை பிரச்சனை தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, தமிழகத்தின் தினசரி மின்சாரத்தடை 17 ஆயிரம் மெகாவாட் ஆகும் இதில் மத்திய அரசின் தொகுப்பிலிருந்து 1,500 முதல் 2,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு திடீரென்று 4,909 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. ஆகவே இந்த பற்றாக்குறைதான் அறிவிக்கப்படாத மின் தடைக்கு முக்கிய காரணம் என அவர் கூறியிருக்கிறார்.

சூரிய ஒளி மின் சக்தி மூலமாக 3,033 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. அதோடு தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு மின்தடை பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்