விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

0
186
Former minister Jayakumar comments about Vijay's political entry!
Former minister Jayakumar comments about Vijay's political entry!

விஜய்யின் அரசியல் நுழைவு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கருத்து!

இந்திய அரசியலில் திரைப்பட நடிகர்களின் நுழைவு என்பது தொன்று தொட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்கள் அரசியல் என்னும் மைதானத்தில் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் ஏராளம், தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். குறிப்பாக தமிழக அரசியல் களம் என்பது சற்று வித்தியாசமான ஒன்றாக உள்ளது. இங்கு எத்தனையோ நடிகர்கள் மற்றும் பொது அமைப்பினர் அரசியலில் நுழைந்தாலும் அதில் ஜொலித்தவர்கள் சிலர்.

அரசியலுக்கு வரவேண்டும் என்றால் சமுதாய சிந்தனை இருந்தால் போதும் என்ற நிலை மாறி திரைப்பட துறையில் இருந்திருக்க வேண்டும் என்ற அடிப்படை நிலை வந்துவிட்டதை யாராலும் மறுக்க இயலாது, தமிழக அரசியலில் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம், ஆனால் அவ்வாறு வந்தவர்களில் குறிப்பிட்டு சிலர் தான் அரசியலில் தங்களுக்கான விதையை ஆழமாக ஊன்றி விட்டு சென்றுள்ளனர். அந்த வரிசையில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, இவர்கள் மட்டுமே சினிமாவில் இருந்து அரசியலில் நிரந்தர இடம் பிடித்தவர்கள்.

அந்த வரிசையில் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தனது ஆரம்பகால திரைப்படங்கள் முதல் அரசியல் வசனம் பேசி பலரையும் கவர்ந்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த பத்து வருடமாக இவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஏதேனும் சில காட்சிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை குத்தி காட்டுவது போல அமைந்திருக்கும்.

இது போல தனது படங்களில் மக்களை பாதிக்கும் அரசின் திட்டங்களை குறித்து நிச்சயம் பல காட்சிகளை மையப்படுத்தி நடித்திருப்பார், இவரது அரசியல் வசனம் மற்றும் காட்சிகள் குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அவருடைய மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் அம்பேத்கர் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என கூறப்பட்ட நிலையில், விஜய்யின் இந்த செயல் அவரது அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

விஜய்யின் இந்த அரசியல் நகர்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் அவரை வர வேண்டாம் என சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை, அதே சமயத்தில் ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், சும்மா அரசியலில் நானும் குதிக்கிறேன் என்று குதிக்க கூடாது, வந்து பார்க்கட்டும் அப்போது தான் அரசியலில் எவ்வளவு கஷ்டம், நஷ்டம், இருக்கும் என்று புரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.