2023-24 கல்வியாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

0
39

2023-24 கல்வியாண்டில் புதிய மாதிரி பாடத்திட்டம்… உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

 

2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

2023-24 கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள புதிய மாதிரிப் பாடத்திட்டமானது பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் தன்னாட்சி கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுவதின் நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவது ஆகும்.

 

மாணவர்கள் பயிலும் பாடப்பிரிவுகளுக்கு இடையே 75 சதவீதம் இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணை பெற்றும் பணியில் சேர முடியாமல் தற்பொழுது மாணவர்கள் மாணவர்கள் சிரப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பணியில் சேர முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஒரு வருடமாக புதிய பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், பத்து கலைஅறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள், இதர கல்லூரிகளில் இருந்து 922 பேராசிரியர்களை பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாக நியமித்தனர். அதன் பின்னர் இந்த 922 உறுப்பினர்களைக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமாக 301 பாடத்திட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த மறு சீரமைக்கப்பட்ட 301 பாடத்திட்டங்களில் 166 இளநிலைப்பாடங்களும் 135 முதுநிலைப் பாடங்களும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

 

மறு சீரமைக்கப்பட்ட இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கீழ்வரும் 5 பிரிவுகள் இடம்பெற்றுள்ளது.

 

* பகுதி I தமிழ்

* பகுதி II ஆங்கிலம்

* பகுதி III முக்கியமான பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்கள்

* பகுதி IV திறன் மேம்பாட்டு பாடங்கள்

* பகுதி V மதிப்புக் கூட்டுக் கல்வி

 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.