“லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!

0
77

 “லாட்டரியில் 25 கோடி ஜெயித்ததும் நிம்மதி போச்சு…” புலம்பும் ஆட்டோ டிரைவர்!

கேரளாவில் அட்டோ டிரைவர் ஒருவர் சமீபத்தில் 25 கோடி லாட்டரி பணத்தை வென்றது இணையத்தில் வைரல் ஆனது.

கேரள அரசின் மெகா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ. 25 கோடி முதல் பரிசை வென்றார் ஆட்டோ ஓட்டுனர் அனூப். ஆனால் அவர் இப்போது தன்னுடைய நிம்மதியை இழந்துள்ளதாக கூறியுள்ளார். இதுபற்றி “முதல் பரிசை வென்றுள்ளதால், தங்களின் பல்வேறு தேவைகளை தீர்த்து வைக்குமாறு பலரும் என்னை தேடிவருவதால், நான் மன அமைதியை இழந்துவிட்டேன், எனது சொந்த வீட்டில் கூட என்னால் வசிக்க முடியவில்லை. நான் இப்போது  வீடு மாறிக்கொண்டே இருக்கிறேன். பரிசை வெல்லும் வரை நான் அனுபவித்த மன அமைதியை இழந்த நிலையில் நான் இப்போது இருக்கிறேன்.” என்று அவர் கூறினார்.

அனூப் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் முக்கிய தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீகாரியத்தில் வசித்து ஆட்டோ ஓட்டி வருகிறார். வெற்றிக்கான டிக்கெட்டை தனது குழந்தையின் சேமிப்புப் பெட்டியில் இருந்து எடுத்த பணத்தில் உள்ளூர் ஏஜெண்டிடம் இருந்து வாங்கினார். பரிசு அறிவிக்கப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது தான் மன உளைச்சலில் இருப்பதாகவும் அனூப் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

“நான் வீடு மாறிக்கொண்டே இருக்க வேண்டும், நான் என் சகோதரி வீட்டில் சென்று தங்கினேன், ஆனால் மக்கள் அந்த முகவரியைத் தேடி அங்கு வந்தார்கள், என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நான் இப்போது வந்தேன், என்னிடம் இன்னும் அந்த லாட்டரி பணம் கூட கிடைக்கவில்லை. இவ்வளவு பணம் கிடைத்திருக்க வேண்டாமோ என்று இப்போது நினைக்கிறேன். ஒருவேளை நான் மூன்றாம் பரிசை வென்றிருக்க வேண்டும்,” என்று அனூப் தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு பேசுகிறார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில் இப்போது கூட சிலர் தனது கதவைத் தட்டுகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அனூப் வென்ற 25 கோடி ரூபாயில் வரி மற்றும் இதர பாக்கிகள் கழிக்கப்பட்ட பிறகு, அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.15 கோடியை மட்டுமே பெறுவார். “இப்போது நான் வெற்றி பெற்றிருக்க வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். பெரும்பாலான மக்களைப் போலவே நானும் வெற்றியையும் அதன்பிறகு எல்லா விளம்பரங்களையும் ஓரிரு நாட்கள் அனுபவித்தேன். ஆனால் இப்போது இது ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டது, நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வெளியே கூட செல்ல முடியாது. பண உதவி கேட்டு மக்கள் என்னைப் பின்தொடர்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.