உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

0
113

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 27 ஆம் தேதி தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல மறுத்த தொழிலாளர்கள் வாயில் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று நிர்வாகம் அறிவித்தபடி டிசம்பர் 01ஆம் தேதி அசோக் லேலண்ட் தொழிற்சாலைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைவர் குசேலர் தலைமையில் யூனிட் 1 யூனிட் 2 ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 600 க்கும் மேற்பட்ட அசோக் லேலண்ட் ஊழியர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகம் தொழிலாளருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை வேலை நாளாக அறிவிக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது. உற்பத்தியை பெருக்க இது போன்று தொழிலாளர்களை நசுக்க கூடாது என தொழிலாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.