பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின்  (PMAY-G) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு!! வழக்கு குறித்து புதிய தகவல்!!

0
261
#image_title

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின்  (PMAY-G) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு!! வழக்கு குறித்து புதிய தகவல்!!

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் முறைகேடு செய்த லால்குடி பஞ்சாயத்து அலுவலர்கள் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “திருச்சி, லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) திட்டத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அதிகாரிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நீலகண்டன் மற்றும் தங்கப்பொண்ணு ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நீலகண்டன் வீட்டை கட்டி அவருடைய வங்கி கணக்கில் நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலகண்டனின் அதே வீட்டின் புகைப்படத்தை, தங்கபொண்ணு என்ற மற்றொரு பயனாளியின் ஐடி க்கு அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். அந்த வீட்டின் முழு நிதியையும் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் பயனாளி தங்கப்பொண்ணு 16.10.2020 அன்று இறந்துவிட்டார், அதேசமயம் யூனியன் அலுவலக அதிகாரிகள் அவர் உயிருடன் இருப்பது போன்று போலியான கட்டைவிரல் அடையாளத்துடன் அவருடைய ஒப்புதலை உருவாக்கி இறந்தவர் ஜூலை, 2022-ல் யூனியன் அலுவலகத்திற்கு நேரில் வந்ததாக பதிவுகளில் காட்டியுள்ளனர்.

எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யவும், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அமர்வு, ” தமிழக முதன்மை செயலரின் கடிதத்தின் அடிப்படையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரி பார்க்கும் அலுவலர்களை நியமிக்க வேண்டும். பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் முறைகேடு செய்த லால்குடி பஞ்சாயத்து அலுவலர்கள் மீது திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அரசு திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு ஏழை மக்கள் பயனடைவதை உறுதிப்படுத்தும் வகையில், ஊரக மேம்பாட்டு துறையின் உதவி இயக்குனர் அல்லது உதவி ஆட்சியர் தரத்திற்கு குறையாத நபர்களை சரிபார்க்கும் அலுவலர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அரசின் திட்டங்கள் உரியவர்களை சென்றடையும் வகையிலான நேர்மறையான விசயம் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.