சுயேட்சை வேட்பாளரிலிருந்து திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவிய மன்சூர் அலிகான்..!! 

சுயேட்சை வேட்பாளரிலிருந்து திடீரென காங்கிரஸ் கட்சிக்கு தாவிய மன்சூர் அலிகான்..!!

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படம் மூலம் அறிமுகமான மன்சூர் அலிகான் தனது மிரட்டலான நடிப்பு காரணமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகராக உயர்ந்தார். படங்களில் மட்டும் வில்லனாக நடித்த இவர் நிஜ வாழ்க்கையிலும் கொஞ்சம் சர்ச்சையான நடிகர் தான். அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

உதாரணமாக நடிகைகள் த்ரிஷா மற்றும் ரோஜா குறித்து ஆபாசமாக பேசி மாட்டிக்கொண்டார். அதனை தொடர்ந்து அரசியலில் இறங்க முடிவெடுத்த மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கி அதற்கு தலைவராக பதவி வகித்து வந்தார். ஆனால், இவரின் தொடர் சர்ச்சை பேச்சு காரணமாக கட்சி தலைமை இவரை கட்சியில் இருந்து வெளியேற்றியது.

அதன் பின்னர் தான் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதற்கிடையில் பிரச்சாரத்தின் இறுதி நாளன்று திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அடுத்து ஒரு சம்பவம் செய்துள்ளார்.

அதன்படி மன்சூர் அலிகான் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணையபோவதாக கூறியுள்ளார். இதற்காக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கட்சியில் இணைவதற்கான விருப்ப கடிதத்தை அளித்துள்ளார். இதையடுத்து பேசிய மன்சூர் அலிகான், முதலில் நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்.

இதனை தொடர்ந்து எனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியையும் காங்கிரஸ் உடன் இணைத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரையும் காங்கிரஸில் இணைய வைக்க உள்ளதாக கூறியுள்ளார். கட்சி வேண்டாமென கூறி சுயேட்சையாக வேலூர் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தேர்தல் முடிந்ததும் கட்சி மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.