ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

0
857
#image_title

ஆட்டம் மாறுதே! அன்புமணி ஆசையில் மண்ணை வாரி போட்ட அண்ணாமலை

ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிலிருந்து விலகிக் கொள்ள திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்க மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

ஏற்கனவே திமுகவின் வேட்பாளர் மறைந்த புகழேந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில் மீண்டும் அந்த தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் ஆளும் திமுக தனது வழக்கமான பாணியில் இடைத்தேர்தலில் படு வேகமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பம்பரமாக சுழன்று திமுகவினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்த நிலையில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என விக்கிரவாண்டி களத்தில் உள்ள திமுகவின் அமைச்சர்கள் தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிமுகவின். வாக்குகளை பெற பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி என இரு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த பாமகவுக்கு அதிமுக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் பாஜகவை எதிர்க்கும் அதிமுகவினர் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொது எதிரியான திமுகவை வீழ்த்த அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் இவரின் பேச்சுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்தது போல அதிமுக பாமகவுக்கு இந்த இடைத்தேர்தலில் மறைமுக ஆதரவை அளிக்கும் விதமாக இந்த சூழல் அமைந்துள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ் அவர்களும் அதிமுகவையோ அல்லது அதன் தலைவர்களையோ விமர்சனம் எதுவும் செய்யாமல் மென்மையான போக்கில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பாமக பெற்றால் அங்கு வெற்றி பெறவும் வாய்ப்புண்டு. அதே நேரத்தில் திமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையவும் வாய்ப்புண்டு. பாமகவை பொறுத்தவரையில் இது இரண்டுமே சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் பாமக தொண்டர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த ஆசையில் மண்ணை வாரிப்போடும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பேச்சு அமைந்துள்ளது. விக்கிரவாண்டி தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பெரும்பாலான இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சால் அதிமுகவுடன் இணக்கமான போக்கில் இருக்கும் பாமக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினர் வாக்குகள் நாம் தமிழர் கட்சி பக்கம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. மக்களவை தேர்தலில் அடைந்த தோல்வியிலிருந்து கட்சியையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்த இடைத்தேர்தலில் களமிறங்கிய பாமக மற்றும் அண்புமணியின் ஆசையில் அண்ணாமலையின் பேச்சானது மண்ணை வாரிப் போடும் வகையில் அமைந்துள்ளது.