தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. அதாவது தாய் மொழியான தமிழ் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது பயிற்று மொழியாகவும் பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், தமிழக அரசு பாடத்திட்டங்களில் ஹிந்தியை கொண்டு வரவேண்டும் என பாஜக பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறது.
இதனால்தான் 1964ம் வருடம் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டமே நடைபெற்றது. அப்போதைய அறிஞர் அண்ணா அரசு இதை ஏற்கவில்லை. இந்த போராட்டத்திற்காக பலர் உயிரையும் விட்டனர். இப்போது மத்தியில் தொடந்து பாஜக மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதால் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் ஹிந்தியை கொண்டு வர முயற்சிக்கிறது.
ஆனால், ஆளும் திமுக அரசு இதை கடுமையாக எதிர்க்கிறது. யார் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்பதே தமிழக அரசின் கொள்கையாக இருக்கிறது. இதனால் கோபமடைந்த மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அனுமதித்தால் மட்டுமே கல்வி தொடர்பான நிதியை வழங்குவோம் என சொன்னார்கள்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இப்படி சொன்னது தமிழத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. திமுக எம்.பி.கனிமொழி போன்றவர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ‘தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கூட தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது ’ என பேசியிருக்கிறார்.
மேலும், திமுகவினர் மிகவும் மோசமானவர்கள். அநாகரீகமானவர்கள். ஜனநாயகம் இல்லாதவர்கள்.. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் மீது அக்கறை இல்லாதவர்கள். தமிழக மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை’ எனவும் பேசியிருக்கிறார்.