தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கல்வியை கொண்டு வருவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு – தமிழ்நாடு அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தினால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பரபரப்பை கிளப்பினார். அதேசமயம், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், இந்த மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சமீபத்தில் கையெழுத்து இயக்கத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், “அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்கிற வித்தியாசமின்றி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான மற்றும் சமமான கல்விக் கிடைக்க வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு தான் தமிழக பாஜக சார்பில் சமக்கல்வி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இதில், ஒரு கோடி பேர் கையெழுத்து என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது தமிழக மக்களின் பேராதரவுடன் களத்திலும், இணையதளம் மூலமும் 20 என்ற இலக்கை எட்டியுள்ளோம். எனவே, விரைவில் ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கை எட்டுவோம். மும்மொழிக் கல்வியை, நம் குழந்தைகள் படிக்கும் தமிழக அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வருவோம்” என பதிவிட்டுள்ளார்.