தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இருப்பதாக கூறி, லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடிக்கு முன் லாரிகளை நிறுத்தி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை ஒப்பந்தமும் முறையில்லா வசூலும்!
2011ம் ஆண்டு சாலையை கட்டும் ஒப்பந்தத்தின் படி, மரம் நடும் பணிகள், சென்டர் மீடியன், பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகள் தரப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கேற்ற பணிகள் செய்யப்படவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டு.
இதனிடையே, 2023ல் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டும், சுங்கக் கட்டண வசூல் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது. மாதம் ரூ.11 கோடி வசூலித்தும், பராமரிப்புக்காக வெறும் ரூ.30 லட்சமே செலவழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற தடையை மீறி தொடரும் வசூல்!
இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர, நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். தரமான சாலை வசதி இல்லையெனில் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
போராட்டம் வெடித்தது – சுங்கச்சாவடிக்கு முன் லாரி நிறுத்தம்!
தடை உத்தரவை மீறி இன்று (ஜூன் 4) புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், லாரி உரிமையாளர்கள் சாலையை மறித்து வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸ் சமாதானம்
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பரபரப்பை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை ஜூன் 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.