முகுந்தனுடன் கைகோர்த்த அன்புமணி… அதிர்ச்சியில் ராமதாஸ் – அடுத்தடுத்து நடப்பது என்ன?

Photo of author

By Anand

முகுந்தனுடன் கைகோர்த்த அன்புமணி… அதிர்ச்சியில் ராமதாஸ் – அடுத்தடுத்து நடப்பது என்ன?

Anand

Anbumani Ramadoss

பாமகவில் அப்பா-மகன் இடையேயான அதிகாரப்பகிர்வு சார்ந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது முன்னாள் இளைஞரணி தலைவர் முகுந்தனுடன் அன்புமணி ராமதாஸ் சமரசம் செய்திருப்பது போல தகவல்கள் வெளியாகி, ராமதாஸ் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பொதுக்குழு மேடையில் வெடித்த விவகாரம்

கடந்த டிசம்பர் மாத பொதுக்குழு கூட்டத்தில், முகுந்தனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்படுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதே மேடையில் அன்புமணி வெளிப்படையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “புதிதாக வந்தவர்களுக்கு பதவியில்லை… அனுபவம் வாய்ந்தவர்களை பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்” என அவர் கூறியதும், கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முகுந்தனின் ராஜினாமா… பின்னணியில் அழுத்தம்?

இதனையடுத்து, முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து விலகினார். பொதுமக்களுக்கு சொல்வது போல, அவர் “தனிப்பட்ட காரணங்களுக்காக” விலகினாலும், குடும்ப அழுத்தம் காரணமாகவே பதவியை விட்டதாக கூறப்படுகிறது. அதிலும் “தலைவர் அன்புமணி” என அவர் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

அன்புமணியின் டீல்?

சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் நேரடியாக முகுந்தனை அழைத்து, இங்கதான் எதிர்காலம் இருக்கு. அங்க இருந்தா வளர்ச்சி கிடையாது. இப்போ திடீர்னு விலகினாலும் சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏ சீட் தருகிறேன். வெற்றி பெற்று முன்னேறு” என்ற டீல் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட கணக்குகளில் அன்புமணிக்கு பலம்

மாநில அளவில் அன்புமணியின் ஆதரவாளர்களே பெரும்பான்மை என்பதை அறிந்த முகுந்தன், ஆரம்பத்தில் கண்டிப்பாக இருந்தாலும், தன்னை சுற்றியுள்ள குடும்ப அழுத்தத்தையும், அன்புமணியின் வாக்குறுதியையும் கணக்கில் கொண்டு, அதை ஒப்புக்கொள்ள முன்வந்ததாக கூறப்படுகிறது.

ராமதாஸ் அதிர்ச்சி – சட்ட ஆலோசனையில் தீவிரம்

இந்த திடீர் முடிவுகள் அனைத்தும் நிறுவனரும் தலைவருமான ராமதாஸ் தரப்பில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தற்போது அவர் கட்சி கட்டுப்பாட்டை சட்ட ரீதியில் எவ்வாறு நிலைநாட்டலாம் என்பதை ஆராய முன்னணி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்னர் பாமகவில் வெடிக்கும் பூகம்பம்?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாமகவின் உட்கட்சியில் இந்த அப்பா-மகன் குழப்பம், கட்சியின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பரிதவிக்கும் கட்சி நிர்வாகிகள், “கட்சி தலைமை யாரிடம்?”, “அதிகாரம் யாரிடம்?” என குழப்பத்தில் இருக்கின்றனர்.