மதுரையில் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாநாடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் முருக பக்தர் மாநாடு நடத்தும் பாஜகவின் நோக்கம் என்ன?
இந்தக் கேள்வியைக் கேட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவுக்கு நேரடியான சவால்களை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை முருகன் சூரசம்ஹாரம் செய்வார்” என்று காட்டமாக பேசினார்.
முருக பக்தர்கள் மாநாடு பாஜக அரசியல் நாடகமா?
“மதுரையில் முருகன் மாநாடு நடத்துவதற்கான அரசியல் நோக்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை, “பாஜக, மதத்தை அரசியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அயோத்தியில் ராமர் மாநாடு, இப்போது மதுரையில் முருகர் மாநாடு… இது ஒரு வகையான மத வேறுபாடு தூண்டும் முயற்சியாகவே தெரிகிறது” என்றார்.
“பாஜகவின் முகம் முருகனிடம் தெரியாது!”
பாஜக தலைவர் எல். முருகனை நேரடியாக குறிவைத்த அவர் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது எனவும், அவர் கூறுவது போலெல்லாம் நடக்காது என்றும் கூறினார். மேலும் , “முருகனை வம்புக்கு இழுக்கிறார்கள். பாஜகவும் அதிமுகவும் பகல் கனவு காண்கின்றன. தமிழ் கடவுள் முருகன், தமிழ்நாட்டையும் மக்களையும் வஞ்சிக்கும் பாஜகவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.
மூச்சை விடவைக்கும் செல்வபேருந்தகை உரை:
“இந்தியா கூட்டணி இரும்பு போல உறுதியானது. அதைப் பற்றி பாஜக பேச கூட தகுதி இல்லை.”
“மணிப்பூரில் பெண்கள் அவலமாக இருக்க, பாஜகவினர் பேசவே இல்லை. ஆனால் முருகனை முன்னிலைப்படுத்தி மாநாடுகள் நடத்துகிறார்கள்.”
“பாஜக மக்களை ஏமாற்றலாம்; முருகனை முடியாது!”
“பாஜகவின் மூன்றுமொழிக் கொள்கையை தமிழக மக்கள் ஒட்டவே மாட்டார்கள்.”
“2026-ல் பாஜகவின் முடிவை முருகனே தீர்மானிப்பார்”
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலம் பேசுவதை விமர்சித்த அவர்,“பாஜக தமிழ்மொழிக்கு செய்ய வேண்டியது ஒன்றும் செய்யவில்லை. தமிழில் அர்ச்சனை செய்ய கூடாது என நீதிமன்றம் செல்லும் இவர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவே இல்லை,” என்றும் கூறினார்.
இது போன்று தமிழ் மீது அக்கறையின்றி செயல்படும் பாஜக, 2026-ல் தேர்தலில் மக்களிடமிருந்தும், முருகனிடமிருந்தும் தண்டனைப் பெறப்போகிறது என்றார் செல்வப்பெருந்தகை.