ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்திலுள்ள சிறைச்சாலையின் அருகில் ஐஎஸ் தீவிரவாதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 43 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் அந்த சிறைச்சாலை கைதிகளும், பொதுமக்களும், சிறைச்சாலைக் காவலர்களும் அடங்குவர்.
அந்த தாக்குதல் முடிந்தபிறகு இன்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் தீவிரவாதிகளில் 3 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதிகள் நடத்திய இந்தத் திடீர் தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலைக்கு முன்னதாக தாலிபான்களுடன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசு தாலிபான்களை அவ்வப்போது விடுவித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தாலிபான்கள் உடன் கத்தாரில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பிறகும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரசுப் படைகளும் தீவிரமான மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த நாட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.