கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா பாதிப்பு!

0
81

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் இவர் தனது தொகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பொது நிகழ்ச்சிளில் பங்கேற்பது என தீவிரமாக இருந்தாலும் முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை பின்பற்றுவது என அரசின் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வந்தார். இதற்கு முன் இவர் 5 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.