வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

0
86

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு மட்டங்களில்,வெவ்வேறு பதவிகளில் அரசு மருத்துவ மனைகளிலும்,மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அதன் மூலமாக அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் அமைச்சர் மற்றும் செயலாளர் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர்.இதனால் மருத்துவர்கள அவர்களுடைய போரட்டத்தை விலக்கி கொண்டனர்.

ஆனால் 2 மாத காலம் ஆகியும் இந்த கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. இதனையடுத்து இன்று 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் இதுவரை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவோ எந்தவித உத்தரவாதமும் தராததால் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதில் 4 அரசு மருத்துவர்கள் சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் வழங்கபடும் சிகிச்சைகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் வார்டு பணி ஆகியவற்றை மட்டும் செய்வதாகவும் ஏனைய அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதுமான சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். மருத்துவர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் புற நோயாளிகள் பிரிவு, அனைத்து சிறப்பு பிரிவு நோயாளிகள் என அனைவரும் அவதிப்பட்டனர்.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சை கிடைப்பதால் அதனை நம்பி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ செலவு செய்ய வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி தான் உயிர் வாழ்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் புற நோயாளிகளாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் புறநோயாளிகள் சேவை முற்றிலும் முடங்கியதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். தேர்வு செய்யப்பட்ட சிறிய பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. அதனை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதயம், நரம்பு, கல்லீரல், எலும்பு முறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளும் டாக்டர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டன.

பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பட்ட படிப்பு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவர்கள் மற்றும் நர்சுகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வந்து முழுமையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களும் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அங்கு 1000 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பணிக்கு வரவில்லை. பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அனைத்து வார்டுகளிலும் புறநோயாளிகள் பிரிவிலும் அவர்கள் மூலமாகவே மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்தை சமாளிக்கும் வகையில் சுமார் 3000 மருத்துவ மாணவர்கள் நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இன்று நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சை எதுவும் இதனால் நடைபெறவில்லை. அவசர சிகிச்சை தவிர மற்ற ஆபரே‌ஷன்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

அரசு பொது மருத்துவமனையில் காத்திருந்த பொதுமக்கள்

இதேபோல ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் இங்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

காய்ச்சல் பிரிவு அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் அரசு டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்திமலர், உள்தங்கும் மருத்துவ அதிகாரி ரமேஷ் ஆகியோர் புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்து நோயாளிகளை பரிசோதித்தனர்.

அங்கு 500 அரசு டாக்டர்கள் பணியாற்றிய நிலையில் வேலை நிறுத்தத்தால் இன்று பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்தனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் ஜெயந்தி கூறுகையில், ‘டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் மூலம் புறநோயாளிகள் பிரிவு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகள் 4 பேருடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Parthipan K