காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த சோகம்! உடல் எடையை குறைக்க  மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம் ! 

0
156

காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த சோகம்! உடல் எடையை குறைக்க  மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம் !

இன்றைய சூழலில் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது உடல் பருமன். இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகின்றனர் உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடை குறைப்பு, மருந்து எடுத்துக்கொண்டு  உடல் குறைப்பு என பல விதங்களில் உடல் பருமனை குறைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். சில பேர் தனியார் நிறுவனத்தை அணுகி அங்கு தரப்படும் மருந்துகளை உட்கொண்டு எடை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இதேபோல் காஞ்சிபுரத்தில் ஒரு வாலிபர் உடல் எடை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகி மருந்து வாங்கி சாப்பிட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலத்தில் உள்ள பாளையம் என்பவரின் மகன் சூர்யா வயது 21. இவர் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது உடல் எடை அதிகமாக இருந்ததால் தனியார் நிறுவனத்தை அணுகி உடல் எடை குறைப்பதற்காக ஆலோசனைகளை கேட்டார். இதனை அடுத்து உடல் எடை குறைப்பிற்காக தனியார் நிறுவனம் சில மருந்துகளை சூர்யாவிற்கு வழங்கியது.

இந்த மருந்துகளை கடந்த 10 நாட்களாக சூரியா உட்கொண்டு வந்துள்ளார்.  இதில் அவரது உடல் எடை மிகவும் வேகமாக குறைய தொடங்கியது. இதனை அடுத்து கடந்த 1-ஆம் தேதி இரவு சூர்யா திடீரென மயங்கி விழுந்தார் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் எடை குறைப்புக்கு மருந்து சாப்பிட்ட வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.