அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தேதி அறிவிப்பு!.. வேகம் காட்டும் பழனிச்சாமி…

Photo of author

By அசோக்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் தேதி அறிவிப்பு!.. வேகம் காட்டும் பழனிச்சாமி…

அசோக்

admk

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் கோபப்பட்ட பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன்பின் பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தது, டெல்லி, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது போன்ற காரணங்களால் பழனிச்சாமியின் மனநிலை மாறியது. ஒருபக்கம், விஜயுடன் கூட்டணி வைக்கலாம் என்றால் அவர் அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி கேட்பதோடு விஜயின் தலைமையில்தான் கூட்டணி என கண்டிஷன் போட்டதும் பழனிச்சாமி பாஜக பக்கம் போனார். எந்த கட்சியுடன் ‘இனிமேல் கூட்டணி இல்லை’ என சொன்னாரோ அதே கட்சியுடன் இப்போது இணைந்துவிட்டார்.

eps

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 25ம் தேதி அதிமுக தலைமை அலுவகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவற்றி கட்சி மேலிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 25.4.2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர் கூட்டம் என்பதால் இது கவனம் பெறுகிறது. இதற்கு அடுத்து மே 2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டமும் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பு அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தவே இந்த கூட்டம் நடைபெறும் என கருதப்படுகிறது.