சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று!!

0
65

சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று நாட்கள் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. இதில் பங்கேற்கும் அனைத்து எம்.எல்.ஏ.களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோகநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று தெரியவந்தது. இதனால் 14ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் சட்டமன்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். ஆனால், அன்றிரவே அவருக்கு திடீரென குளிர்காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் லோகநாதன் பங்கேற்கவில்லை.

இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K