சகலகலா வல்லவர் என திரைத்துறையில் அழைக்கப்படும் டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன். சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். சின்ன வயது முதலே சினிமாவில் இருப்பதால் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாவற்றிலும் திறமை கொண்டவர் இவர். ஆனாலு,ம் ஷுட்டிங்கிற்கு சரியாக போகாமல் கெட்ட பெயர் எடுத்தார்.
திடீரென வந்து ஒரு படம் நடித்து ஹிட் கொடுப்பார். அதன்பின் சில தோல்விப்படங்களை கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார். இவரின் நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளியாகி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அதன்பின் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு சரித்திர படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது.

ஆனால், பட்ஜெட் காரணமாக ராஜ்கமல் பின் வாங்கிவிட்டது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. இந்த படம் ஜுன் மாதம் வெளியாகவுள்ளது. அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இது சிம்புவின் 49வது திரைப்படமாகும்.
அடுத்து சிம்புவின் 50 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை சிம்புவே தயாரிப்பதாக சொல்லப்பட்டாலும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள். இது சரித்திர கதையாகும். அடுத்து சிம்புவின் 51வது படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு படம் வெளியாகி 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து 3 படங்களின் அறிவிப்பை சிம்பு வெளியிட்டிருக்கிறார். இதனால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.