தெற்கு அந்தமான் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

0
88

தமிழகம் முழுவதும் தற்சமயம் வெயில் சுட்டெரித்து வருகிறது இன்னும் சொல்லப்போனால் மாலை 5 மணி அளவில் கூட வெளியே தலையை நீட்ட முடியவில்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாக ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கும் ஆனால் இந்த வருடம் பனியின் தாக்கம் இருந்தாலும் கூட அதேயளவிற்கு வெயிலின் தாக்கமும் காணப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில். தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த 3 நாட்களுக்குள் செல்லும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் எதிர்வரும் 3ஆம் தேதி முதல் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால், புதுச்சேரி மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.