கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அதிமுக. ஆனால், தேர்தலில் தோல்வி அடையவே இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சில நாட்களுக்கு முன்பு ‘வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா?’ என பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அப்போது முடிவெடுப்போம்’ என சொன்னாரே தவிர ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை ஏற்கனவே சொல்லிவிட்டோம்’ என அவர் சொல்லவில்லை.
அதோடு, கொள்கை வேறு.. கூட்டணி வேறு என்றும் பேசியிருந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி என பலரும் நினைத்தார்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். பழனிச்சாமியுடன் தம்பி துரை, வேலுமணி, சண்முகம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தார்கள்.. சுமார் 2 மணி நேரம் அவர்கள் ஆலோசனை செய்தனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பதே சந்திப்பின் சாரம்சம் என டெல்லி பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அமித்ஷா உடனான சந்திப்பு பற்றி எடப்பாடி பழனிச்சாமி வேறு மாதிரி சொன்னார்.
மக்கள் பிரச்சனைகளுக்காகவே மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும் என விளக்கமளித்தார். ஆனால், கூட்டணி பற்றி பேசப்படவில்லை என பழனிச்சாமி சொல்வது பொய்.. பாஜகவுடன் வேறென்ன பேசியிருக்க போகிறார்கள்? என திமுகவினர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா ‘அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கிறது.