பாமகவில் குடும்ப உறுப்பினர்கள் இடையே நிலவி வந்த தலைமைத் தகராறு தற்போது கட்சி பிளவிற்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் தற்போது சட்ட ரீதியான அதிகார உரிமை குறித்து தனித்தனியாக சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமை பதவிக்காலம் முடிந்ததா?
கடந்த 2022 ஆம் ஆண்டு மே 28 அன்று பாமக பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதால், 2025 மே 28 அன்று அவரது பதவிக்காலம் முடிந்ததாக ராமதாஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ராமதாஸ் தனது ஆடிட்டர் மற்றும் சட்ட ஆலோசகருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ராமதாஸ் அதிகாரம்
தலைவரின் பதவி காலாவதி ஆகியதால், பாமக ஒழுங்கு விதிகளின்படி, கட்சியின் முழுப்பட்ட அதிகாரமும் நிறுவனரான ராமதாஸுக்கு தானாகவே வந்துவிட்டதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் கட்சியின் நிர்வாகம் மீதான முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தொடங்கி விட்டார்.
மாறி மாறி கூட்டங்கள் – இரண்டு தரப்பும் களம் இறங்கும்!
அதே நேரத்தில் அன்புமணி ராமதாஸ் தரப்பு, தலைமைக்கு மீண்டும் தங்களை நியமிக்க கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை திரட்டத் தொடங்கியிருக்க, ராமதாஸ் தரப்பு விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தி புதிய நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பழைய தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சி
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். அந்த வகையில் பாமகவில் முன்னர் சிறப்பாக செயல்பட்டு சில கருத்து வேறுபாடுகளால் ஒதுங்கியுள்ள முன்னாள் நிர்வாகிகளை அழைத்து பேசி அவர்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கவும் அவர் திட்டமிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பாமக முன்னாள் மாநில தலைவர் வேல்முருகனை மீண்டும் கட்சிக்குள் அழைத்து, முக்கிய பதவி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கட்சியிலிருந்து வெளியேறிய மூத்த நிர்வாகிகள் பலரும் மீண்டும் பாமகவில் இணைவதன் மூலம் தனக்கான அதிகாரத்தை மீண்டும் பெறவும் கட்சியை மீண்டும் அதே கட்டுப்பாட்டுடன் நடத்தவும் ராமதாஸ் செயல்படத் திட்டமிட்டு வருகிறார்.
தேர்தல் ஆணையம் முடிவு?
இவ்வாறெல்லாம் நடக்கும்போது, கட்சித் தலைமை தொடர்பான உரிமையை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அப்போது இருதரப்பும் தனித்தனியே தங்கள் அதிகாரங்களை முன்வைத்து தங்களுடைய பதவியையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்த செய்யும் சூழலுக்கு வரலாம். அப்போது கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் செல்லும் என தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.