2021ம் வருடம் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தமிழகத்தில் பாஜக என்கிற ஒரு கட்சி இருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் இவர்தான். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.
இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அண்ணாமலை மாற்றப்பட்டு தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டர். நயினார் நாகேந்திரன் தலைவராக பொறுப்பேற்ற விழாவில் கலந்துகொண்டு அண்ணாமலை கிளம்பிய போது அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ‘அண்ணா எங்களை விட்டு போகாதீங்க அண்ணா’ என அழுதபடியே அவரின் காரை மறித்துக்கொண்டனர். இதனால் சில நிமிடங்கள் அங்கிருந்து அவரால் செல்ல முடியவில்லை. தற்போது அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேல் அண்ணாமலை டெல்லியில் அரசியல் செய்வார் என பாஜகவினர் சொல்கிறார்கள்.
இந்நிலையில், அண்ணாமலை இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். ரஜினி ஸ்டைலில் வெள்ளை நிற பைஜாமா அணிந்தபடி பாபா முத்திரையை காட்டி அண்ணாமலை போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.