வியாபாரிக்கு நீதி கேட்டவர்கள் விவசாயிக்கு நீதி கேட்கவில்லையே! நீதியிலும் சாதியா? கொந்தளிக்கும் அப்பாவி மக்கள் 

0
110
#NeedJusticeForAriyalurFarmer
#NeedJusticeForAriyalurFarmer

வியாபாரிக்கு நீதி கேட்டவர்கள் விவசாயிக்கு நீதி கேட்கவில்லையே! நீதியிலும் சாதியா? கொந்தளிக்கும் அப்பாவி மக்கள்

சமீப காலமாக காவல்துறையினரின் அத்துமீறல் தொடர்ந்து கொண்டேயுள்ளது. அந்த வகையில் சில மாதங்களுக்கு ஒரு முறை லாக் அப் மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. விசாரணை என்ற பெயரில் குற்றவாளி அல்லது அப்பாவிகளை மனிதாபிமானமற்ற முறையில் அடித்து கொள்வது தொடர் கதையாக இருக்கிறது.இது காவல்துறையினரின் அதிகார மனப்பான்மையை காட்டுவதாகவே தெரிகிறது

ஒவ்வொரு லாக் அப் மரணத்திற்கு பிறகும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்தவர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகள் இடமாற்றம் சில மாதங்கள் சஸ்பென்ட் என முடிந்து விடுகிறது. இதனாலேயே காவல்துறையினர் தொடர்ந்து அத்துமீறி செயல்படுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது அரியலூர் மாவட்டத்தில் காசாங்கோட்டையில் விசாரணை என்ற பெயரில் வழக்கில் எந்த வகையிலும் சம்பந்தபடாத விவசாயி ஒருவர் 8 பேர் கொண்ட காவல்துறை குழு அடித்ததால் மரணமடைந்துள்ளார். இதற்கான ஆதாரம் அவர் அளித்த வாக்கு மூலத்திலும், மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் இன்னும் வழக்கு கூட போட வில்லை என அப்பகுதி பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக களமிறங்கிய பாமக அதற்காக போராட்டங்களையும் நடத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து படிக்க: 8 காவலர்கள் மீது பாயும் கொலை வழக்கு.. ஒருபோதும் பாமக சும்மா விடாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்!

இந்நிலையில் காவல்துறையினரால் நடந்த இந்த விவசாயி மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல்கட்சி தலைவர்களோ அல்லது ஊடகங்களோ நீதி கேட்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தான்குளம் பகுதியில் வியாபாரி லாக் அப்பில் வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்கங்கள் கடையடைப்பை நடத்தின. பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அதீத முக்கியத்துவத்தை கொடுத்து இந்த சம்பவத்தை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவினர். ஆனால் வட தமிழகத்தில் இருக்கும் அரியலூரில் நடந்த இந்த சம்பவம் எந்த ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியவில்லையா? ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அன்று வியாபாரி அடித்து கொல்லபட்டதிற்கு நீதி கேட்டவர்கள் இன்று இந்த விவசாயி மரணத்திற்கு ஏன் நீதி கேட்கவில்லை.நீதியிலும் சாதியா? என்றும் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி வேண்டி சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்து வருகிறது. அந்தவகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #NeedJusticeForAriyalurFarmer என்ற டேக்கில் அவருக்கு ஆதரவான கோரிக்கைகள் பதிவிடப்பட்டு வருகிறது. தமிழக அரசு உடனடியாக இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.