அஷ்டமி நவமி திதியில் நற்காரியங்களை தவிர்ப்பதன் காரணம் என்ன?

0
88

அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி, நவமி ராமர் பிறந்த திதி, ஆனாலும் இந்த திதிகளில் எந்தவிதமான நற்காரியங்களையும் யாரும் ஆரம்பிப்பதில்லை. அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் தொடங்கப்படுவதில்லை.

இந்த 3 தினங்களிலும் ஆரம்பிக்கும் காரியங்கள் மிக விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே தான் போகும் என தெரிவிக்கிறார்கள். தற்போது அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

அஷ்டமி: கோகுலாஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர் பிறந்த அந்த திதியில் பிறந்த காரணத்தால்தான் அவர் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார். கடைசியில் வெற்றி பெற்றார்.

ஆகவே தான் அஷ்டமி திதியில் சுப காரியங்களான திருமணம், வீடு குடி ஏறுதல், சொத்து வாங்குதல், உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். ஆனாலும், இந்த நாள் தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள், போன்ற தெய்வீக காரியங்களுக்கு உகந்த நாள் ஆகும்.

அதிலும் குறிப்பாக செங்கல் சூளைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது, போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்ற திதியாகும்.

நவமி: அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும், அடுத்து வரும் 9வது நாள் நவமி ஆகும். இந்த திதியில் தான் ராமபிரான் பிறந்தார். அவர் அரியணை ஏற்கும் சமயத்தில் காட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது. அதோடு மட்டுமல்லாமல் சீதையைப் பிரிந்து அவர் அடைந்த துன்பங்கள் சொல்லி மாலாது. இதனால்தான் நவமி திதியை பலரும் நற்காரியங்கள் செய்யாமல் தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இந்த திதியும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற திதி என சொல்லப்படுகிறது.

பொதுவாகவே அஷ்டமி, நவமி, உள்ளிட்ட தினங்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும் அஷ்டமி நவமி திதிகள் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும்.

கரிநாள் : இந்த நாளைப் பற்றி அறிந்து கொள்ள, முதலில் திதி, நட்சத்திர கணக்கு, தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி எனவும், அதற்கு எதிரே இருக்கின்ற பாகையை நட்சத்திர கணக்கு எனவும், தெரிவிப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட திதி, நட்சத்திரம் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால், அது கரி நாளாக கருதப்படுகிறது.

பொதுவாக கரிநாளில் நற்காரியங்களை ஆரம்பித்தால், அது விருத்தி ஆகாது என தெரிவிப்பார்கள். இனி தொடரக்கூடாது என நான் நினைக்கும் காரியங்களை இந்த கரிநாளில் செய்யலாம். அதிலும் குறிப்பாக கடனை திருப்பி செலுத்துதல், அன்றைய தினம் கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது என தெரிவிக்கிறார்கள்.