நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம். இந்த படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள்.
இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்.
விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு இன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்கள் குடியிருக்கும் பகுதியில் சென்று அதற்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார். இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு முதல்கட்ட ஒப்புதலை வழங்கியது ஒன்றிய அரசு. கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளது. 5476 ஏக்கர் பரப்பளவில் ரூ.27,400 கோடி செலவில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதைத்தொடந்து பிரபல சினிமா விமர்சகர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘தளபதி விஜய்.. உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது. வெளிய வாங்க’ என கலாய்த்திருக்கிறார்.