நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நாள் முதலே திமுகவை பற்றி மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மறந்தும் அவரின் வாயில் அதிமுக என்கிற வார்த்தை வரவே இல்லை. இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோதும் திமுகவை மட்டுமே விமர்சித்தார். மேலும்.. ‘பார்த்து பண்ணுங்க சார்’ என பிரதமர் மோடிக்கு கோரிக்க வைத்தார்.
இந்நிலையில், பிரபல யுடியூப் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
அம்மா உணவகத்தின் வெஜ் குஸ்கா!.
திமுகவிற்கு எதிராக பொங்கும்போது மட்டன் பிரியாணி போல மாஸ் காட்டும் விஜய் அதிமுகவை பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாத..ஆறிப்போன குஸ்கா போல இருக்கிறார். கேட்டால் ஆளுங்கட்சியை எதிர்ப்பதுதான் வீரம் எனும் மொக்கை லாஜிக் வேறு. நாட்டை ஆளும் பாஜகவிற்கு எதிராக அரசியல் செய்து.. அறுத்து தள்ளிட்ட மாதிரி.

ஆளும் திமுக அரசை விமர்சிக்க வேண்டும் என்பது முற்றிலும் சரி. ஆனால் அதிமுக தமிழ்நாட்டை ஆண்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது? 2021 வரை 10 வருடங்களாக அவர்களின் ஆட்சிதானே? ஊழல், லஞ்சம் பற்றி வாய் கிழிய பேசும் நீங்கள் A1 என குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற ஜெயலலிதாவை பறறி பேசாமல் பம்முவது ஏன்?
எடப்பாடி ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? ஜெ.வை விமர்சித்தால் பெண்களின் வாக்குகள் கிடைக்காது எனும் பீதியா? தேர்தல் சமயத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த அமைதியா? ஒரு சாமான்ய மனிதரை கேட்டால் கூட திமுகவும், அதிமுகவும் எங்களை ஆண்டதுபோதும். புதிதாய் வரும் நேர்மையான தலைவரின் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு அளிப்போம் என ஒவ்வொரு முறையும் கூறுவதுண்டு.
ஆனால் நீங்கள் அந்த சாமான்யருக்கு உள்ள புரிதல் கூட இல்லாமல் திமுகவை மட்டும் கடித்து வைத்து அதிமுகவின் மறைமுக சொம்பு போல செயல்படுவது முதுகெலும்பற்ற செயல்.. உங்கள் சாயம் வேகமாக வெளுத்து வருகிறது’ என பதிவிட்டிருக்கிறார்.