இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்

இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்

கேரளா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துபாயில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஜாய் அரக்கல் என்பவர் துபாயில் எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் இன்னோவா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். தனது குடும்பத்துடன் ஜூமைராவில் வசித்து வந்த இவர் பர்துபாய் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு தொழில்களை செய்து வந்தார். 

இதில் எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம், ஐஎஸ்ஓ தொட்டியை சுத்தம் சேவைகள், கப்பல் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகன தொலைத் தொடர்பு நிறுவனம் உள்ளிட்டவை அவரது நிறுவனத்தின் முக்கியத் தொழில்களாக இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற அரக்கல், நண்பர் வசித்த அந்த குடியிருப்பின் 14 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த அந்நாட்டு காவல் துறையினர், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவரது உடலைச் சொந்த ஊரான கேரளா மாநிலம் வயநாட்டிற்கு எடுத்துவர அனுமதி பெறப்பட்டு, விரைவில் அவரது உடலை அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் கையால் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜாய் அரக்கலின் இந்த இறப்பானது தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Comment