உதயநிதி மீது தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்கு! தப்புமா பதவி!

0
153

தான் ஒரு சட்டசபை உறுப்பினராக ஆனதிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் முதலமைச்சரின் ஒரே மகனுமான உதயநிதி ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உதவி என்று கேட்பவர்களுக்கு நேரடியாகவே சென்று உதவி புரிவது, தவறு செய்தால் உடனடியாக தண்டனை வழங்குவது, போன்ற பல அதிரடி நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் தமிழ்நாட்டிலேயே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மிகவும் பிரபலமாகி இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தனி மரியாதை ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.சமீபத்தில் கூட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒரு நியாய விலை கடையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் அவரே நேரடியாக சென்று பார்வையிட்டு அங்கே இருந்த நிறை குறைகளை சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன் அந்த இடத்திலேயே இருந்து பொதுமக்களுக்கு அவரே நேரடியாக நலத்திட்ட உதவிகளையும் வழங்கி இருக்கின்றார். இது அங்கிருந்த மக்களை நெகிழ வைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக தெரிவித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து நின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் கசாலியை விட 69155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். அவருடைய வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம் எல் ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தன்மீதான குற்ற வழக்குகள் தொடர்பாக தவறான தகவல்களை தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அவருடைய வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று அறிவிக்க வேண்டும் எனவும், அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.