கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.
அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகலை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது.
ஏற்கனவே 1960 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தம் முழுவதுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பாகிஸ்தானில் எல்லையாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டேரி பகுதியில் இருக்கக்கூடிய சோதனை சாவடி முழுவதுமாக மூடப்படுவதாகவும் எல்லை வழியாக நாடு தாண்டி சென்றவர்கள் மே 1ஆம் தேதிக்குள் அவரவர் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மேலும், இந்தியாவில் இருக்கக்கூடிய முப்படை தலைவர்களும் ஒரு வாரத்திற்குள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அதேபோல பாகிஸ்தானில் இருக்கக்கூடிய இந்திய முப்படை தூதர்கள் உடனடியாக இந்தியாவிற்கு திரும்பி வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.