பெண் காவலர்க்கு கொலை மிரட்டல்! பாஜக இளைஞரணி தலைவர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி.இவருடைய மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்.இவருடைய மகன் ரஞ்சித்குமார்.இவர் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக இருகின்றார்.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக சவிதாவும்,ரஞ்சித்குமாரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.அதனையடுத்து சவிதா சுமார் 4லட்சம் ரூபாய் சொசைட்டி லோன் பெற்று இரண்டு லட்சத்தை ரஞ்சித்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சர்தார் ஷெரீப் பஞ்சர் கடை அருகே சவிதா நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை ரஞ்சித்குமார் வழிமறித்துள்ளார்.30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.பணம் கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் அதிர்ச்சி அடைந்த சவிதா இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் காவலரிடம் பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.