AIADMK: செப்டம்பர் 5 யில் மனம்திறந்து பேசப் போவதாக அறிவித்திருந்த செங்கோட்டையன், இன்று செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க விலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும், அவ்வாறு இணைக்காவிட்டால் அதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாங்களே மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக உள்ள நிலையில் அரசியல் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதனை தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா செங்கோட்டையனின் உடம்பில் அ.தி.மு.க-வின் ரத்தம் தான் ஓடுகிறது என்றும், அ.தி.மு.க-வின் உண்மை தொண்டன் செங்கோட்டையன் என்றும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க- வின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது நல்ல விஷயம் என்றும், அனைவரும் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்றும் கூறி இருக்கிறார்.
தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நல்லது தான். ஆனால் அ.தி.மு.க-வின் உட்கட்சி பிரச்சனையில் நான் கருத்து கூற விரும்பவில்லை என்றும் கூறினார். வி.சி.க-வின் தலைவர் தொல். திருமாவளவன் இது உட்கட்சி பிரச்சனை என்பதால் நான் கூறுவதற்க்கு ஒன்றுமில்லை என்றும், செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறந்து பேசவில்லை, யார் யாரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை அவர் முழுமையாக கூறவில்லை என்றும் தனது கருத்தை கூறினார். அ.தி.மு.க முன்னால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இந்த விவகாரத்தில் ஈ.பி.ஸ் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது நல்லது தான் என்றும், அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க ஆட்சியை வீழ்த்தி விட முடியும் என்று தன் கருத்தை கூறியுள்ளார். அனைத்து அரசியல் உயர்மட்ட தலைவர்களும் அ.தி.மு.க-வின் உட்கட்சி பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்ற பொதுவான கருத்தையே முன்வைத்துள்ளனர்.