பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை!

0
75
Disaster caused by broken tooth set! The plight of a 6-year-old girl!
Disaster caused by broken tooth set! The plight of a 6-year-old girl!

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை!

விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகாவில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு  6 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தம்பதியின் மகள் தனது சகோதரியுடன் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவே இல்லை. அவளது சகோதரி மட்டுமே வீட்டிற்கு வந்தாள்.

இதனால் 6 வயது சிறுமியை காணவில்லை என பல இடங்களில் தேடியும், சிறுமி கிடைக்கவில்லை. அதனால் தங்களது மகள் மாயமாகி விட்டதாக சிறுமியின் பெற்றோர் சந்தேகமடைந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மாயமான சிறுமியை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளத்தின் உள்ளே மாயமான 6 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளாள்.

அவளது கை, கால்கள் கட்டி சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும் அவளை சாக்கு பையில் வைத்து அந்த குழிக்குள் வீசியுள்ளனர். ஆனால் சிறுமியை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசாருக்கு தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்துவந்த சங்கனகவுடா என்பவரின், குடும்பத்தினருக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக முன்விரோதம் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும் சிறுமி கொலையான பின்னர் சங்கனகவுடா தலைமறைவாகி விட்டார். எனவே 23 வயதான சங்கனகவுடாவை பிடிக்க தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். பின்னர் அவரை பிடித்து கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது சில பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. அதாவது சங்கனகவுடாவின் தாய்க்கு பற்கள் உடைந்து போனதன் காரணமாக அவருக்கு செயற்கை பல்செட்டை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பல் செட்டை சங்கனகவுடாவின் பாட்டி அவரது வீட்டின் வெளியே வைத்துள்ளார்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த இந்த ஆறு வயது சிறுமி பல் செட்டின் மீது கல்லை எறிந்து விட்டு உள்ளாள். அதன் காரணமாக அது உடைந்து போயுள்ளது. இதனால் சிறுமியை சங்கனகவுடாவின் தாய் அடித்து உள்ளார். இது தொடர்பாக இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சங்கனகவுடா விளையாடிக் கொண்டிருந்த அந்த 6 வயது சிறுமியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் சாக்குமூட்டையில் கட்டி வீசி எறிந்ததும் அம்பலமாகியுள்ளது. எனவே போலீசார் தொடர்ந்து  அந்த நபரை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.