மீண்டும் பழைய நிலையை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! என்ன முடிவை எடுப்பார் உடன்பிறப்புகள் ஆர்வம்!

0
100

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவில் தலைவர் என்ற பொறுப்புக்கு உடனடியாக வந்துவிடவில்லை, அவர் அந்த பதவிக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்து இருக்கிறார். அவர் முதல் முறை ஆயிரம்விளக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். பின்பு அடுத்த 5 ஆண்டுகளில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக வெற்றி வாகை சூடினார்.

அதன் பிறகு அவரை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் கருணாநிதியிடம் வலியுறுத்தி வந்தார்கள், ஆனாலும் பல அமைச்சர்கள் வலியுறுத்தியும் கூட கருணாநிதி ஸ்டாலினை அமைச்சராக விருப்பம் கொள்ளவில்லை.மாறாக அவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து மக்கள் வாக்களித்த தன் பெயரில் சென்னையின் மேயராக பொறுப்பேற்றார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு ஒருமுறை தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்திருந்தார். அதாவது கடந்த 1996ஆம் வருடம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தபோது என்னை அமைச்சராக வேண்டும் என்று நிர்வாகிகள் எல்லோருமே கருணாநிதியிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் அவர் என்னை அமைச்சராக விரும்பவில்லை நானும் அந்த நேரத்தில் அது தொடர்பாக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் நிர்வாகிகள் எவ்வளவோ கட்டாயப்படுத்தி கூட கருணாநிதி அதனை முற்றிலுமாக மறுத்துவிட்டார். அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் வாக்குகளை பெற்று வரக்கூடிய முதல் மேயராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

அப்போது கருணாநிதி என்னிடம் அனைவரும் ஒன்றாக இணைந்து உன்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற ஒரு சிறிய அறையில் உட்கார வைக்க பார்த்தார்கள். ஆனால் நான் எவ்வளவு பெரிய மாளிகையில் உன்னை அமர வைத்திருக்கிறேன் பார்த்தாயா என்று பெருமையுடன் தெரிவித்தார் என்று கூறியிருந்தார் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின்.

அதன்பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் .2006 ஆம் ஆண்டு தான் ஸ்டாலினுக்கு முதல் முறையாக தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதைய கருணாநிதி அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருந்தார்.

தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்து விடவில்லை. சற்றேறக்குறைய அவருடைய அரசியல் பயணம் 1975ஆம் ஆண்டு ஆரம்பித்து 2006 ஆம் ஆண்டு தான் முழுமை பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனால் 2006 ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த சமயத்திலும் சரி, 2011ஆம் ஆண்டு அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருந்த சமயத்திலும் சரி, வயது மூப்பு காரணமாக அவருக்கு ஓய்வு அளித்து விட்டு அவர் இடத்துக்கு ஸ்டாலினை கொண்டு வரலாம் என்று திமுக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது.

ஆனாலும் கருணாநிதி அப்போதும்கூட ஸ்டாலினை எந்த பொறுப்பிலும் அமர வைக்க தயாராக இல்லை அவர் கட்சி அளவிலேயே திமுகவின் பொருளாளராக மட்டுமே இருந்தார்.

அதன் பிறகு திமுகவின் செயல் தலைவராக அவர் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்டார் ஸ்டாலின்.

இப்படிப் படிப்படியாக வளர்ந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு முதல் முறையாக தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிலைநிறுத்திக் கொண்டு போட்டியிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக சுமார் 125 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. அதன் மூலமாக ஸ்டாலினின் நீண்டகாலக் கனவு நனவாகியது, அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால் ஸ்டாலினின் ஒரே மகனான உதயநிதிக்கோ இப்படி எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை அவர் கடந்த 2019ஆம் ஆண்டு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார் .அவர் அரசியலுக்கு வந்து இரண்டு வருடங்களில் சட்டசபை உறுப்பினர் ஆகி விட்டார். அடுத்ததாக அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று அமைச்சர்கள் வரிசையாக முணுமுணுக்க தொடங்கிவிட்டார்கள், அதாவது கடந்த 1996ஆம் ஆண்டு கருணாநிதியிடம் அமைச்சர்களும் நிர்வாகிகளும், வலியுறுத்தி போல தற்போது பேசத் தொடங்கிவிட்டார்கள்.

ஸ்டாலின் குடும்பத்திற்கும், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்து வைத்த இந்த பேச்சை அமைச்சர்கள் வரிசையாக வழிமொழிந்து வருகிறார்கள். அவர் துணைமுதலமைச்சராகவே வந்துவிடுவார் என்றும் சீமான் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி விவகாரத்தில் எந்த மாதிரியான முடிவை முன்னெடுக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒருவேளை கருணாநிதி ஸ்டாலின் விஷயத்தில் எடுத்த அதே முடிவை இவரும் எடுப்பாரா? அல்லது இவருடைய முடிவு வேறு மாதிரியாக இருக்குமா? என்பது தற்சமயம் திமுக உடன்பிறப்புகளின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

உதயநிதியை பொருத்தவரையில் அவரை அமைச்சராக்கினாலும் சரி, மேயராக்கினாலும் சரி, அவருடைய செயல்பாடு எப்போதுமே தரமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.ஆகவே உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் என்ன முடிவை மேற்கொள்வார் என்பதை அறிவதற்கு திமுகவின் உடன்பிறப்புகள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.