தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

0
41
#image_title

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு, மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திரு உருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, அதிமுக சார்பில், சென்னையில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருஉருவச் சிலை மற்றும் திரு உருவப் படத்திற்கு அதிமுக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள், ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முழுமுதற் கடவுளாம், வினை தீர்க்கும் தெய்வமாம், ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் கடவுள் இல்லை; கடவுள் இல்லை என்றே கூறி வந்தார். விநாயகர் சிலையை கூட அவர் செருப்பால் அடித்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. அப்படி இருக்கும் போது, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினத்தில், அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை வணங்கும் மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையையும்; பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

author avatar
Parthipan K