மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா?

0
61
Former Minister who appealed! Need a whip on a dead horse?
Former Minister who appealed! Need a whip on a dead horse?

மேல் முறையீடு செய்த முன்னாள் அமைச்சர்! செத்த குதிரையின் மீது சவுக்கடி தேவையா?

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 13 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் தல்லாகுலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும், வழக்கை முடிக்க பொதுத்துறை உத்தரவிட்டதாகவும் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன் சொத்து குவிப்பு புகார் குறித்த அமைச்சரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதாவோ நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது தேவையற்றது. மேலும் செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது என்று கூறி மேற்கொண்டு விசாரிப்பதில் எவ்வித பலனும் இல்லை என்றும் கூறி மகேந்திரனின் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

அதன் காரணமாக நீதிபதிகள் கூறிய மாறுபட்ட தீர்ப்பை மூன்றாவது நீதிபதி விசாரிக்கத் தேவை எழுந்தது. மேலும் இது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தான் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம். நிர்மல்குமார் கடந்த ஜூன் மாத இறுதியில் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஐந்தாம் தேதி இந்த வழக்கு சென்னை ஹை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை அன்று வழக்கை விசாரிக்காமல் வைத்திருந்தனர். இந்நிலையில் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணைக்கு தடை கோரிய முன்னாள் அமைச்சர், இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுவில், விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பை வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டுமென்றும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே, மூன்றாவது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும் அவரது இந்த வழக்கில் விதிகளை நீதிபதிகள் பின்பற்றவில்லை என்றும் மேல் முறையீட்டு மனுவின் மூலம் கூறி இருந்தார்.