எரிபொருளைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி சென்னையில் தொடங்கியது

0
255
fuel consumption awareness expo
fuel consumption awareness expo

எரிபொருளைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கண்காட்சி சென்னையில் தொடங்கியது

பெட்ரோலிய எரிபொருளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது.

நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழக எல்பிஜி பிரிவின் தலைவரும், பொது மேலாளருமான திரு.எஸ்.பட்டாபிராமன், எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் போது அதை சோதித்துக் காட்டுமாறு கேட்பதற்கு நுகர்வோருக்கு உரிமை உள்ளது என்று கூறினார். சிலிண்டரில் எரிவாயு சரியான எடையில் உள்ளதா, வால்வுகளில் கசிவு உள்ளதா, சீல் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதுடன், எரிவாயு அடுப்பில் நீல நிற ஸ்வாலை வருகிறதா என்பதையும் நுகர்வோர் ஆய்வு செய்யலாம் என்று அவர் கூறினார். சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைன்  மூலமாகவோ அல்லது இண்டேன் மொபைல் செயலி மூலமாகவோ பதிவு செய்யலாம் என்றும், சிலிண்டருக்கான பணத்தை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகச் செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசலின் தரம் மற்றும் அளவு சோதனை குறித்து செயல்முறை விளக்கமளித்த இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (விஜிலென்ஸ்) திரு.தீப்திநாத், 5 லிட்டர் அளவைக் கொண்டோ அல்லது தானியங்கி பில் மூலமாகவோ, பில்டர் பேப்பர் சோதனை, அடர்த்தி சோதனை, அளவு சோதனை ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் எந்த நேரத்திலும் வலியுறுத்தலாம் என தெரிவித்தார்.

இந்தியன் ஆயிலின் பொது மேலாளர் (விஜிலென்ஸ்) திரு.வரப்பிரசாத ராவ், எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், புகார்கள் அல்லது குறைபாடுகள் இருந்தால் அந்தத் தொலைபேசி எண்களை நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். நுகர்வோரின் குறைபாடுகளுக்கு உடனடித் தீர்வு காண எம்ஓபிஎன்ஜி என்னும் மின்னணு சேவை இணையதளத்தை அல்லது எண்ணெய் நிறுவனங்களின் வலைதளங்களை அணுகலாம்.

நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.ஏ.மாரியப்பன், நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், இந்தியன் ஆயில் நிறுவனமும் கூட்டாக இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “நேர்மை – ஒரு வாழ்க்கை முறை” என்று கூறிய அவர், பொது வாழ்வில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்தப் பிரச்சார இயக்கம், இம்மாதம் 28-ந் தேதி முதல் அடுத்த மாதம்
2-ந் தேதி வரை கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

Source: PIB

Previous articleமருத்துவர்கள் மீது பணிமுறிவு நடவடிக்கை பாயும்! அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
Next articleகல்லூரி மாணவனை அடித்து கொள்ளிடம் ஆற்றில் வீசிய கொடூரன்கள்! திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here