கொரோனா ஊரடங்கினால் சொந்த ஊருக்கு சென்றவர்கள், வேலை தேடி பிற மாவட்டங்களுக்குச் சென்றவர்கள், விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக ஊருக்கு சென்றவர்கள் என பலதரப்பட்ட காரணங்களால் சென்னையை விட்டு வெளியே சென்றவர்களும்,
வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
மேலும் புதுச்சேரி அரசு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ததை அடுத்து, அங்கிருந்து சென்னை வருபவர்களும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புபவர்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசல் மக்கள் சென்னையை மீண்டும் ஆக்கிரமித்து இயல்பு வாழ்க்கையை தொடங்கி விட்டனர் என்பதை காட்டுகிறது.
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் 60 சதவிகித கொரோனா பாதிப்பு சென்னையில் தான் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது படிப்படியாக குறையும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் நெருக்கம் அதிகமாகியுள்ளது.