ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களே உஷார்! வங்கி வெளியிட்ட எச்சரிக்கை!
டெக்னாலஜி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அந்த அளவிற்கு அதன் சார்ந்த தீய விளைவுகளையும் சந்தித்து வருகிறோம். தற்போதெல்லாம் வங்கிக்கு சென்று பணம் செலுத்துவது பணம் பெறுவது என மாறி அனைத்தையும் செல்போனில் செய்யும் வசதியை கொண்டு வந்து விட்டனர். இது மக்கள் புழக்கத்தில் பெரும்பாரியாக வரவேற்கப்பட்டது. இருப்பினும் இதில் பல சிக்கல்கள் உண்டானது. ஓர் வங்கி கணக்கை வைத்தே அதில் உள்ள பணத்தை நூதன முறையில் கொள்ளையடித்து விடுகின்றனர்.
டெக்னாலஜியாக மாறிய பின்பு இதுபோல பல பிரச்சனைகளை நாளுக்கு நாள் வங்கிகள் சந்தித்து தான் வருகிறது. பல விழிப்புணர்வுகளை வங்கிகள் ஏற்படுத்தியும், கொள்ளையர்கள் புதிய முறையை கையாண்டு மக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொள்கின்றனர். அவ்வாறு ஐசிஐசிஐ நிறுவனம் தங்களது வாடிக்கையாளருக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்பெல்லாம் அழைப்பு விடுத்து வங்கி கணக்கு எண் கேட்டு அதன்பின் அவரது செல்போனிற்கு அனுப்பப்படும் ஓடிபி எண் கேட்டும் நூதன முறையில் கொள்ளையடித்து வந்தனர். மக்கள் தற்பொழுது இது குறித்து விழித்துக் கொண்ட நிலையில், வேறு ஒரு முறையை கையாண்டு வருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் உபயோகம் செய்யும் சமூக வலைத்தளத்தில் அவர்களது நண்பர்களின் ஐடியில் இருந்து கேட்பது போலவே பணம் அனுப்ப சொல்லி கேட்கின்றனர்.நமது நண்பர் தானே கேட்கிறார் என வாடிக்கையாளரும் அவர் கேட்கும் பணத்தை கொடுத்து விடுகின்றனர். நாளடைவில் தான் தெரிகிறது இது கொள்ளையர்கள் விரித்த வலை என்று. இது சமீப நாட்களாக ஐசிஐசிஐ நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் கூறும் தொடர் புகாராக உள்ளது. அதனால் அந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாரேனும் சமூகவலைத்தளத்தில் உங்களது நண்பர் அல்லது உறவினர்கள் போல பணம் கேட்டால் அவர்களை தொடர்பு கொண்டு பேசிவிட்டு, பிறகு பணத்தை அனுப்புங்கள் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கொள்ளையர்கள் ஐசிஐசிஐ வங்கி ஊழியர்களை தான் குறிவைத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையிலிருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுது கொள்ளையர்கள் புதிய முறையில் கையாண்டு மக்களிடமிருந்து பணத்தை பறித்து விடுகின்றனர்.