PMK: பாமக கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கிடையே நாளைக்கு நாள் மோதல் போக்கானது அதிகரித்துள்ளது. நேற்று வரை ராமதாஸ் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடியும் வரை நான் தலைவராக இருப்பேன். அதன் பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி ஏற்றுக்கொள்ளட்டும் என கூறி வந்தார். ஆனால் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாளுக்கு நாள் அன்புமணி எனக்கு எதிராக செயல்படுவதை பார்க்கும் போது தலைவர் பதவி கொடுக்க வேண்டாம் என எண்ணுகிறேன். சாகும் வரை நானே தான் தலைவர்.
எனது குடும்பத்தைச் சார்ந்த யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்று கட்சி தொடங்கியபோது கூறினேன். ஆனால் அதனை காப்பாற்ற முடியவில்லை. தற்போது அன்புமணியை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுகிறது. கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து அதற்கு விருதும் வாங்கினார். ஆனால் ஒருபோதும் தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை. அவரிடத்தில் தாய் தந்தைக்கு மதிப்பு என்பதே கிடையாது. மைக்கை தூக்கி அடிப்பதும், அம்மா நோக்கி பாட்டிலை எறிவதுமாக உள்ளார்.
நான் இன்னும் நூறாண்டுகள் இருப்பேன் என அன்புமணி கூறுகிறார். அதேசமயம் மார்பிலும் முதுகிலும் ஈட்டியா குத்துகிறார். இதனால் எனக்கு தூக்கம் மாத்திரை போட்டால் கூட தூக்கம் என்பதில்லை. அன்புமணியால் அதிகப்படியான துன்பம் தான், இது பாசத்தினால் ஏற்படுவது அல்ல. பாசம் எல்லாம் எனக்கு எப்போதும் போய்விட்டது. கட்சி ரீதியாக அவருக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் செயல் தலைவராக இருந்து நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். இதை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் முடிவு எட்டப்ப்படுமாறு கூறியுள்ளார்.