PMK: பாமக கட்சிக்குள் அப்பா மற்றும் மகனுக்கிடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கட்சி இரண்டாக பிரியக் கூடும் என எண்ணி பாஜக தலைமையானது ஆடிட்டர் குருமூர்த்தி வைத்து காய் நகர்த்தி பார்த்தது. பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்ததாக வெளியே கூறப்பட்டாலும் தனது நிலைப்பாட்டிலிருந்து ராமதாஸ் பின்வாங்குவதாக தெரியவில்லை.
அந்த வகையில் முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கும் செயலை ஒரு பக்கம் ராமதாஸ் தொடர்ந்து வந்தாலும் அவர்களை நியமிக்கும் வேலையை அன்புமணி செய்து வருகிறார். இதனால் கட்சி நிலையை கண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் என பலருக்கும் குழப்பநிலை உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் செய்தியாளர்கள் இது ரீதியாக ராமதாஸிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் பதிலளித்ததாவது, குருமூர்த்தி, சைதை துரைசாமி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த முடிவு உண்டாகவில்லை. அதேபோல சமூக நீதிப் பேரவை தலைவராக ஒருவர்தான் இருக்க வேண்டும் என்று நிபந்தனை கிடையாது. அதனால் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரப்போகும் சட்டமன்ற தேர்தல் வரை நான் தான் தலைவராக இருப்பேன் அதன் பின் அன்புமணி அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார்.
நான் பாமகவில் இருப்பவர்களை தொண்டர்களாக பார்க்கவில்லை அவர்களெல்லாம் வணங்கப்பட வேண்டிய தெய்வங்கள். அன்புமணி தலைவராக இருந்தால் யாரும் பார்க்க முடியாது அவர் யாரிடமும் பேசவும் மாட்டார். அவருடைய மூன்று ஆண்டுகள் தலைமை பதவி காலம் முடிந்துவிட்டது. நான் ஒன்றும் தலைவராக இருந்து கூட்டணி அமைத்து அமைச்சர் பதவியை ஒன்றும் பெறப்போவதில்லை. தற்போது பொதுக்குழு கூட்டி வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து முடிவையும் நான் தான் எடுக்கப் போகிறேன்.
வரும் நாட்களில் எனது சொல்லுக்கு மரியாதை கொடுத்து செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டால் அன்புமணிக்கு தீர்வு கிடைக்கும். பாமகவின் நிறுவனர் நான் தான் என்பதால் மக்கள் இப்போதும் என் பக்கம் தான் ஆதரவு அளிப்பார்கள். இதனால் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நான் சொல்வதை அன்புமணி கேட்க வேண்டும் என்று நேரடியாகவே கூறியுள்ளார்.