ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்!

0
113

ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்!

மதுரை மாவட்டத்தில் ஆவினில் உள்ள 61 பணியிடங்களுக்கு அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்ட வழக்கில் 47 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.

மதுரை ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என 61 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட்டன.

இதனால் தகுதியற்றவர்க்கு பணி நியமனம் வழங்கியது, விண்ணப்பிக்காமல் நேரடி பணி நியமனம், எழுத்து தேர்வு வினாத்தாள்  வெளியாகியது, தகுதி உள்ளவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது போன்றவை  2020 மற்றும் 2021 ஆண்டுகளில்  ஆவினில் பணி நியமனத்தின் போது  நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்தன.

மதுரை ஆவினில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி   தலைமையிலான குழு இது பற்றி விசாரித்து வந்த நிலையில் அதற்கான அறிக்கையை சமர்ப்பித்தது. இதனை அடுத்து பால்வளத்துறை துணை பதிவாளர் கணேசன் தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 81 ன் படி விசாரணை நடத்தப்பட்டு ஆணையருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் மேலாளர் உட்பட நேரடியாக நியமிக்கப்பட்ட 47 பேரின்  பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.  இதனை அடுத்து நேரடியாக பணியில் சேர்ந்த 47 பேரை பணி நீக்கம் செய்து ஆணையர் சுப்பையன்  உத்தரவிட்டுள்ளதோடு  மேலும் பணிநியமனம் செய்த தேர்வு குழு மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.