அரியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டாயமா? இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி விளக்கம்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த விவகாரம் தொடர்பாக ஏஐசிடி இடமிருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிர்ணையிக்கப்படாத கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைவருக்கும் பருவ தேர்வில் இருந்தும் விலக்கு அளிப்பதாகவும் மேலும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்றதாகவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதன் மூலம் அரியர் வைத்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக கூறி முதல்வரை வாழ்த்தி பேனர்கள் வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில், இதுதொடர்பாக பேசிய அண்ணா பல்கலை வேந்தர் ஏஐசிடியின் பரிந்துரையை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பிறகு அமைச்சர் அன்பழகன் இதுதொடர்பாக அண்மையில் மாற்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அரசு அறிவித்ததை செயல்படுத்தியே தீரும் என அவர் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையில், சென்னை வேப்பேரியில் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றின் புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுவது தவறானது. இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி ஷர்டுகள் மூலம் தங்கள் உணர்வை வெளிப்படுத்துவது ஜனநாயகப் பண்பாகும்” என அவர் தெரிவித்தார்.

 

மேலும் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அரியர் மாணவர்கள் தேர்ச்சி ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்த அவர்,

 

“அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்ததற்கு எதிராக ஏஐசிடி இடமிருந்து எந்தவிதமான கடிதமும் அரசுக்கு வரவில்லை. அரியர் மாணவர்களின் தேர்ச்சி விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளோடுதான் பின்பற்றப்படும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment