மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயிர் கடன்கள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள விவசாயிங்களின் நலனிற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ரூ.4000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது.கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் அவர்கள் நெல் விளைவிக்கும் விவசாயிகள் எந்திர நெல் நடவு முறையை பின்பற்றினால் ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்களில் வேலை பார்க்க ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.நெல் நாற்று நடவு செய்ய கூட ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தால் நெல் சாகுபடி விளைச்சல் குறையத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் எந்திர நெல் நாற்று நடவு முறையை பின்பற்றினால் அதிக செலவின்றி விவசாயிகள் லாபம் பார்க்கலாம் என்பதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு தானிய உற்பத்தியினை உயர்த்திடும் நோக்கில் நடப்பு ஆண்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் 2025-2026-ம் நிதி ஆண்டில் சிறப்பு தொகுப்புத் திட்டத்தின்கீழ் நெல் எந்திர நடவு மானியம்,நுண்ணூட்டச்சத்து வினியோகம் மற்றும் திரவ நுண்ணுயிர் உரங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை,கூடுதல் செலவினம் போன்ற காரணத்தால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த பிரச்சினையை சமாளிக்க விவசாயிகள் எந்திர நெல் நடவு முறையைக் கடைபிடித்தால் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம்.குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ஏக்கர் ஒன்றுக்கு பின்னேற்பு மானியமாக ரூ.4 ஆயிரம் மட்டும் வழங்கப்பட உள்ளது.எந்திர நடவு முறையில் குறைந்த விதைகளை பயன்படுத்தி ஒரு சென்ட் பரப்பில் பாய் நாற்றங்கால் அல்லது நாற்றங்கால் தட்டுகளில் நாற்று விடப்படுகிறது.
10- 15 வயதுடைய நாற்றுகளை குத்துக்கு ஒன்று வீதம் வரிசை நடவு முறையில் நடப்படுகிறது.இம்முறையால் உரங்களை உட்கிரகிக்கும் திறன் அதிகரிக்கிறது.செடிகளுக்கு போதிய இடம், சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கிறது.களை மேலாண்மை எளிதாகிறது.தூர்களின் எண்ணிக்கை அதிகரித்து மகசூல் அதிகரிக்கிறது.விவசாயிகள் நெல் எந்திர நடவு மானியம் பெற உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்திட வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக்கொள்கிறார்.
பயிர்களின் சீரான வளர்ச்சிக்கு நுண்ணூட்டச்சத்து மிக அவசியம். நுண்ணூட்டச் சத்துக்களான காப்பர், போரான்,துத்தநாகம்,மாங்கனீசு,மெக்னீசியம் முதலியவை மண்ணில் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.மேலும்,இந்த சத்துக்கள் பயிர்களால் உட்கிரகிக்க இயலாத நிலையில் மண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால்,சத்துக்குறைவு ஏற்பட்டு பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும்.இதனை தவிர்த்திட 50 சதவீத மானியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் நுண்ணூட்டக் கலவை வழங்கப்படுகிறது.
நெல் நுண்ணூட்டக் கலவையினை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் மணலுடனோ,தொழு உரத்துடனோ கலந்து நடுவதற்கு முன்பு வயலில் இட வேண்டும்.திரவ நுண்ணுயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்வதற்கும்,நாற்று நனைப்பதற்கும் நேரடியாக வயலில் இடுவதற்கும் பயன்படுகிறது.நெல்லுக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரம் அளிப்பதன் மூலம் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
திரவ அசோஸ்பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்தினை மண்ணில் நிலைநிறுத்தி பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.திரவ பாஸ்போபாக்டீரியா மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து பயிர்களுக்கு அளிக்கிறது.குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ஏக்கருக்கு 500 மி.லிட்டர் அசோஸ்பைரில்லம் மற்றும் 500 மி.லிட்டர் பாஸ்போபாக்டீரியா 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
நமது மாவட்டத்தில் நெல் நுண்ணூட்டக் கலவை மற்றும் திரவ உயிர் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு குறுவை சிறப்பு சாகுபடி தொகுப்புத் திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.மேலும் எந்திர நெல் நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட உள்ளது.இந்த தொகுப்பின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்திடவும்,வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.