கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

0
86

கள்ளக்குறிச்சி எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் அதிரடி இடமாற்றம்!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமும் அதன் பின்னர் நடந்த கலவரமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து பரவலாக வீடியோக்கள் பரவி இணையத்தில் அதிகம் கவனம் பெற்றன.

இந்த கலவரத்தை முன்கூட்டியே கணித்து தடுக்காமல் விட்டது உளவுத்துறையின் தோல்வி என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் இப்போது விசாரணையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில் மாணவியின் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எஸ்.பி மற்றும் கலெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.