தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்தியில் ஆளும் பாஜக அரசு சரியாக கொடுப்பதில்லை. தமிழகத்தில் பாஜகவில் நுழைய முடியவில்லை என்பதே அதற்கு காரணமாக இருக்கிறது. பல தேர்தல்களிலும் போட்டியிட்டும் கணிசமான வாக்குகளை கூட பாஜகவால் பெறமுடியவில்லை. அதோடு, பாஜகவின் திட்டங்களை, குறிப்பாக மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு போன்றவைகளை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்த கோபத்தில்தான் நிதியை கொடுக்காமல் தமிழகத்தை ஆளும் பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசை கடந்த 4 வருடங்களாக திமுக அரசு விமர்சித்து வருகிறது. பாஜகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதில்லை என்பதாலும், பாஜகவின் கொள்கைகளை தமிழகத்தில் செயல்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும் தமிழகத்தை பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. அதிலும், தமிழகம் அதிக அளவிலான ஜி.எஸ்.டி தொகையை மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால், பாஜக அரசு நிதியை தர மறுக்கிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

அதிலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழகத்தின் கல்வி நிதியை கொடுப்போம் என மத்திய கல்வி அமைச்சர் சொன்னது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு, தமிழக எம்.பி.க்கள் மோசமானவர்கள் என அவர் பாராளுமன்றத்தில் பேச கடுமையான எதிர்ப்பை சந்தித்து பின் மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில், சென்னையில் நடந்த ஒருவிழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘நாங்கள் அதிக வரிப்பணம் தருகிறோம். அதில் ரூ.1-க்கு இவ்வளவு தருகிறீர்கள்’ என இங்கே சிலர் வாதம் செய்கிறார்கள். இந்த கணக்கு எங்கிருந்து வருகிறது என எனக்கு புரியவில்லை. இவ்வளவு பணம் கொடுக்கிறோம். நீங்கள் என்ன தருகிறீர்கள் என்ற இவர்களின் ஜனரஞ்சகமான வாதமே தவறு. இவர்கள் மிகவும் குதர்க்கமாக பேசுகிறார்கள்.
ஏளனமாக சொல்ல வேண்டும் எனில் சென்னை, கோவை மக்கள்தான் தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்துகிறார்கள். அரியலூர் போன்ற குறைவான வரி செலுத்தும் மாவட்டங்கள் ‘எங்களுக்கு சென்ன செய்கிறீர்கள்?’ என கேட்கும்போது, சென்னை மக்கள் ‘நாங்கள்தான் அதிக வரி கொடுக்கிறோம். மற்றவர்களுக்கு உதவ வேண்டாம்’ என சொல்வது போல இருக்கிறது. ஆனால், அரசுக்கு அப்படியொரு திட்டமோ கொள்கையோ இல்லை’ என பேசியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்ந்து, மத்திய அமைச்சர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் ‘நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.