மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு பொதுத்தேர்வு! கடைசியாக வாய்ப்பளித்த பள்ளிக்கல்வித்துறை!

0
63

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் உடைய விவரங்களை எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் பள்ளியில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் போன்றவற்றை ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் ஜனவரி மாதம் 19ஆம் தேதி வரை உள்ள நாட்களில் இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது அதோடு தேர்வு கட்டணம் மதிப்பெண் பதிவேடு கட்டணத்தையும் இணையதளம் மூலமாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இருந்தாலும் ஒரு சில பள்ளிகளுக்கு மாணவர்களுடைய விவரங்கள் போன்றவற்றை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதாக தெரிய வந்திருக்கிறது. அதன் காரணமாக, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்வதற்கும் இணையதளம் மூலமாக தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 30ஆம் தேதி வரையில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதுவே 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் இந்த பணிக்காக எந்த காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

ஆகவே அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எல்லோரும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியை ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.