நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் இருதுருவ சக்திகள்! என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

0
82

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது குறித்து தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியிருக்கிறார்.

நேற்று முன்தினம் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது சரிதான் என்று திராவிடர் கழகத்தைச் சார்ந்த அதிகாரப்பூர்வ துணை அமைப்புகள் கொண்டாடி இருந்தார்கள் இருந்தாலும் இங்கே இருக்கக்கூடிய அரசு அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கருத்து சுதந்திரத்தை கருவுடன் அழிக்க நினைக்கின்றது திமுக அரசு என்ற கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

இதனை முன்னிட்டு நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வமான முறையில் 13ஆம் தேதியான நேற்றைய தினம் பிற்பகல் 12.30 மணி அளவில் திராவிடர் கழகம் தொடர்பாக பொய்யான தகவலை பதிவிட்டு இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு இந்தியாவின் முப்படையின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 பேர் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக திராவிடர் கழகத்தின் சார்பாக இரங்கலையும், வீர வணக்கத்தையும், விடுதலை நாளேட்டில் கடந்த 8ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்தோம்.

இவ்வாறு இருக்க திராவிடர் கழகத்தைச் சார்ந்த அதிகாரப்பூர்வமான துணை அமைப்புகள் பிபின் ராவத் உயிரிழந்தது சரிதான் என்று கொண்டாடி வருவதாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வலைதள பதிவில் பதிவு செய்திருக்கிறார். எங்கே, எப்போது, திராவிடர் கழகம் அவர் உயிரிழந்தது சரிதான் என்று கொண்டாடியது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை. இதிலிருந்தே இது பொய்யானது என்பது வெளிப்படையாக தெரிகிறது. திராவிடர் கழகத்தின் மீது பொய்யான வகையில் அபாண்டமாக அவதூறு பரப்பி பொதுமக்கள் இடையே திராவிடர் கழகத்தை மோசமான அபிப்பிராயம் உருவாகும் வண்ணம் செயல்பட்டு இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் மக்களிடையே நிலவும் தீண்டாமை, ஜாதி, மூடநம்பிக்கை, இவற்றை எதிர்த்து சமூகநீதி, பெண்ணுரிமை, மதச்சார்பற்ற தன்மை, பகுத்தறிவு, பிரச்சாரத்தையும், செயல்பாடுகளையும், மேற்கொண்டு வரும் அரசியல் சார்பில்லாத ஒரு சமூக சீர்திருத்த இயக்கத்தின் மீது அவதூறு பரப்பி இருக்கின்ற தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையின் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசையும், குறிப்பாக காவல்துறையையும், கேட்டுக்கொள்கிறோம் என்று வீரமணி கூறியிருக்கிறார்.

திராவிடர் பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்தார்கள் என்று பாஜக குற்றச்சாட்டை முன்வைத்து கண்டனம் தெரிவித்து இருந்தாலும், இதனை வேறு வடிவில் பார்த்தோமானால் பாஜகவுக்கும், திராவிடர் கழகத்திற்கும், எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாது. அதாவது பாஜக என்பது இந்து சமயம் ஒரு கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். அதே நேரம் திராவிடர் கழகம் என்பது தெய்வ நம்பிக்கை அற்ற, மதச் சார்பு இல்லாத ஒரு இயக்கம் என்று சொல்லப்படுகிறது.

அதே போல பல நேரங்களில் பல இடங்களில் கடவுள் நம்பிக்கைகளை தூற்றும் விதமாக திராவிடர் கழகத்தினர் உரையாற்றி இருந்தார்கள் என்றும், சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தெய்வ நம்பிக்கை இருக்கும் பாஜகவும், முற்றிலுமாக தெய்வ நம்பிக்கை அற்ற திராவிடர் கழகமும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு இருப்பது தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பம் தான் என்றும் சொல்கிறார்கள்.ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.